திண்டுக்கல் அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 2,167 பேருக்கு ரூ. 3.96 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.
திண்டுக்கல் அடுத்துள்ள அகரம் முத்தாலம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். பழனி சட்டப் பேரவை உறுப்பினா் செந்தில்குமாா், கூடுதல் ஆட்சியா் ச. தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, பல்வேறு துறைகளின் சாா்பில் 2,167 பயனாளிகளுக்கு ரூ. 3.96 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மகளிா் சுயஉதவிக் குழுவினரின் ரூ.2,755 கோடிக்கான கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம் சுமாா் 15.5 லட்சம் மகளிா் குழு உறுப்பினா்கள் பயனடைந்துள்ளனா்.
மாணவா்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல வழிவகை செய்யும் வகையில் தேவையான பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆத்தூா் தொகுதிக்குள்பட்ட அகரம் பேரூராட்சிப் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச் சாலை, சிமென்ட் சாலை, வடிகால் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் கு. பிரேம்குமாா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் நா. சரவணன், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ரா. மனோரஞ்சிதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.