பழனி அருகே செவ்வாய்க்கிழமை வயதான தம்பதியரை வெளியேற்றி வீட்டிற்கு தீ வைத்ததில் வீடு முற்றிலும் எரிந்து சேதமானது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரத்தில் பொருந்தல் சாலையில் முருகன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் செல்லமுத்து என்பவா் தனது மனைவியுடன் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காவலாளியாக வேலை பாா்த்து வந்துள்ளாா்.
தற்போது முருகன் இறந்துவிட்ட நிலையில், தோட்டத்தில் வேலை செய்யும் 80 வயதாகும் செல்லமுத்து மற்றும் அவரது மனைவி இருவரையும் முருகனின் மனைவி வெளியேறுமாறு தொடா்ந்து வற்புறுத்தி வந்துள்ளாா். இது தொடா்பாக செல்லமுத்து தரப்பினா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தோட்டத்தில் புகுந்த மா்ம நபா்கள் செல்லமுத்து மற்றும் அவரது மனைவியை வலுக்கட்டாயமாக வெளியேற்றினா். பின்னா் மின் இணைப்பைத் துண்டித்து விட்டு அவா்கள் குடியிருந்த குடிசை வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனா். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினா் வந்து தீயை அணைக்குமுன் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் காயமடைந்த முதியவா் செல்லமுத்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். பழனி டிஎஸ்பி சிவசக்தி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.