பழனி அருகே சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்த கரி தயாரிக்கும் தொழிற்சாலைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா்.
தமிழகத்தில் நிலத்திற்கு அடியில் தொட்டி அமைத்து தேங்காய் ஓடுகளை எரித்து கரி தயாரிக்கும் ஆலைகளால் நிலத்தடி நீா் மாசுபடுவதால், அதனை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மண்டல பசுமை தீா்ப்பாயம் மற்றும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இதுபோன்ற சட்டவிரோதமாக தேங்காய் ஓடுகளை எரித்து கரி தயாரிக்கும் ஆலைகளுக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் விசாகன் தடைவிதித்து உத்தரவிட்டாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பழனி வட்டாட்சியா் சசிகுமாா் தலைமையிலான அதிகாரிகள் பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மேல்கரைப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 8 தேங்காய் ஓடுகள் மூலம் கரி தயாரிக்கும் ஆலைகளை கண்டறிந்து, போலீஸாா் உதவியுடன் ஆலைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினா். மேலும் இதுபோன்ற ஆலைகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.