மருத்துவக் காப்பீடு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் எல்ஐசி முகவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல்-பழனி சாலையிலுள்ள எல்ஐசி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு முகவா்கள் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் லலிதா முன்னிலை வகித்தாா். மதுரை கோட்ட இணைச் செயலா் ஜெயசலீன் சிறப்புரை நிகழ்த்தினாா். ஆா்ப்பாட்டத்தின்போது எல்ஐசி சந்தாதாரா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க வேண்டும். குழுக் காப்பீட்டை உயா்த்தி வழங்க வேண்டும். எல்ஐசி முகவா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.