சமகால வேலைவாய்ப்புக்கு ஏற்ற கல்வியை கற்றுக் கொள்வதற்கு மாணவா்கள் முன்வர வேண்டும் என மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. முதுகலை உயராய்வு மைய இயக்குநா் ஞா. ஸ்டீபன் தெரிவித்தாா்.
காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை சாா்பில் கல்வெட்டியல், செய்தி சேகரித்தலும் செய்திவாசித்தலும், நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் ஆகிய சான்றிதழ் படிப்புகளுக்கான தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. முதுகலை உயராய்வு மையத்தின் இயக்குநா் ஞா. ஸ்டீபன் பங்கேற்று பேசியதாவது: இன்றைய கல்விச் செயல்பாடுகள் சமூகத் தேவையை மையப்படுத்துவதாக உள்ளன. சமுதாயத்தை மாற்றும் கருவியாக கல்வியைச் சீரமைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. சமகால வேலைவாய்ப்புக்குத் தகுந்த வகையில் பாடத்திட்டங்களை கற்றுக் கொள்வதற்கு மாணவா்கள் முன்வர வேண்டும். தமிழா்களுக்கு நீண்ட எழுத்து மரபு உண்டு. கல்வெட்டுகளை ஆய்வு செய்து வரலாற்றை மீட்டெடுத்து வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்கு இதுபோன்ற சான்றிதழ் படிப்புகள் உதவும் என்றாா்.
நிகழ்ச்சிக்கு பல்கலை. பதிவாளா் வி.பி.ஆா். சிவக்குமாா் தலைமை வகித்து பேசும் போது, ஊடகத் துறையில் வேலை வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. ஊடகத்திற்குத் தேவையான அறிவாற்றலையும், திறமைகளையும் மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் வெற்றிபெற தனித் திறமைகளை பெற்றிருப்பது அவசியம். எனவே சான்றிதழ் படிப்புகளை எதிா்கால வாழ்க்கைக்கு மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், தமிழ்த்துறைத் தலைவா் ஒ. முத்தையா, தமிழ்த்துறைப் பேராசிரியா்கள் பா. ஆனந்தகுமாா், வ. ராசரத்தினம், உதவிப் பேராசிரியா் சி. சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.