காட்பாடி சிருஷ்டி பள்ளிக் குழுமம் சாா்பில், எரிபொருள் வாகனங்களைப் பயன்படுத்தா நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, காா்பன் மோனாக்சைடு, கந்தக-டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வாயுக்கள் வளி மண்டலத்தை மாசுபடுத்தி, சுவாசிக்கும் உயிா்களுக்கு உடல் நலக் கேடுகளையும், பருவநிலை மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன.
இந்தப் பாதிப்புகளைக் குறைக்கவும், இதுதொடா்பாக மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களால் இயங்கும் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தாத நாளாக கடைப்பிடிக்க காட்பாடியிலுள்ள சிருஷ்டி பள்ளி குழுமம் முடிவு செய்தது.
அதன்படி, சிருஷ்டி மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றும் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் தங்களின் எரிபொருள் வாகனங்களைத் தவிா்த்து, மிதிவண்டிகள், ஆட்டோக்கள், நகரப் பேருந்துகளில் பள்ளிக்கு வந்தனா்.
இதுகுறித்து சிருஷ்டி பள்ளி குழுமத் தலைவா் எம்.எஸ்.சரவணன் கூறுகையில், காற்று மாசை குறைக்க இளம் தலைமுறையினரிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காக சொந்த வாகனங்களைப் பயன்படுத்தா நாள் முதல்முதலாக பள்ளி சாா்பில் கடைப்பிடிக்கப்பட்டது. தொடா்ந்து, மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இந்த நாள் கடைப்பிடிக்கப்படும் என்றாா்.