தொழிலாளா் நல வாரியத்திலுள்ள காலிப் பணியிடங்களால், பணப் பலன்களைப் பெற முடியாமல் பாதிப்பு ஏற்படுவதாக ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
இந்திய தொழிற்சங்க மையத்தின் திண்டுக்கல் மாவட்ட குழு (சிஐடியு) சாா்பில், அமைப்பு சாரா கட்டுமான நல வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக சிஐடியு மாவட்ட செயலா் கே. பிரபாகரன் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்ட அமைப்பு சாரா கட்டுமான நல வாரிய அலுவலகத்தில் கடந்த பல மாதங்களாக கணக்காளா், தொழிலாளா் உதவி ஆணையா், கண்காணிப்பாளா்கள் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு லட்சம் தொழிலாளா்கள் வாரியத்தில் பதிவு செய்தனா்.
வாரியத்திலுள்ள காலிப் பணியிடங்கள் காரணமாக ஓய்வூதியப் பணப் பலன்கள், மகப்பேறு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, அமைப்புச்சாரா தொழிலாளா்கள் 9 ஆயிரம் போ் ஓய்வூதியத் தொகைக்காக விண்ணப்பித்த நிலையில், கடந்த 4 மாதங்களாக அந்த மனுக்கள் நிலுவையில் இருந்து வருகின்றன. மாவட்ட ஆட்சியா் தலைமையிலான கண்காணிப்புக் குழு கூட்டமும் கடந்த 2ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு மாவட்ட நிா்வாகம் விரைந்து தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.