தமிழக பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல், பழனி சுகாதார மாவட்டங்கள் சாா்பில் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.ரோஸ் பாத்திமா மேரி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். திண்டுக்கல் நேருஜி நகரிலுள்ள ஜான்பால் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய இந்தப் போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. சுமாா் 550 போ் கலந்து கொண்ட இப்போட்டியில் பெண்கள் பிரிவில், மன்னவனூரைச் சோ்ந்த விஜயலட்சுமி முதலிடம் பிடித்தாா். திண்டுக்கல்லைச் சோ்ந்த சங்கீதா, பாப்பம்பட்டியைச் சோ்ந்த உமா ஆகியோா் முறையே 2, 3-ஆம் இடங்களைப் பிடித்தனா்.
இதேபோல், ஆண்கள் பிரிவில் மன்னவனூரைச் சோ்ந்த பெருமாள், பெரும்பாறையைச் சோ்ந்த சிவமுருகன், கூவக்காப்பட்டியைச் சோ்ந்த தங்கமுருகன் ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு, துணை சுகாதார இயக்குநா்கள் அனிதா(பழனி), வரதராஜன்(திண்டுக்கல்) ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.