ஒட்டன்சத்திரத்தில் புதிய தொழில் பயிற்சி கல்லூரி தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அமைச்சா் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய தொழில் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். இதையடுத்து, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட 11 இடங்களில் புதிய தொழில் பயிற்சி கல்லூரி தொடங்க சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், மேற்கண்ட 11 இடங்களிலும் கல்லூரி தொடங்க தமிழக அரசு அரசாணை சனிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் விருப்பாட்சியில் நிகழாண்டே தொழில் பயிற்சி கல்லூரி தொடங்கப்படும். இந்தக் கல்லூரியில் குளிா் சாதனப் பெட்டி, நில அளவையா் உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கு சோ்க்கை நடத்தப்படும். ஏற்கெனவே ஒட்டன்சத்திரம் தொகுதியில் இரண்டு அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தொழில் பயிற்சி கல்லூரியும் வரவுள்ளது என்றாா் அவா்.