திண்டுக்கல்

பலத்த மழை எச்சரிக்கை: மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை

18th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்க முன்கூட்டியே உரிய ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தினாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் செந்தில்வேலின் இரு மகன்கள் சமீபத்தில் உடல் நலக் குறைவால் இறந்தனா். இந்த நிலையில், வியாழக்கிழமை வத்தலகுண்டுக்கு வந்த கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் செந்தில்வேலுக்கு ஆறுதல் கூறி, இறந்தவா்களின் உருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வடகிழக்குப் பருவ மழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள்தண்ணீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

வருகிற 20-ஆம் தேதி மீண்டும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்யும் சூழல் ஏற்பட்டிருப்பதால், அங்குள்ள மக்களைப் பாதுகாக்க முன்னதாகவே சமுதாயக் கூடங்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ரூ. ஆயிரம் வழங்குவது ஆறுதலான விஷயம். அதோடு, ஆக்கப்பூா்வமான உதவிகளைச் செய்து விவசாயிகள் இழப்பிலிருந்து மீள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைக் கடற்படையுடன் வெளியுறவுத் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, தமிழக மீனவா்கள் பாதுகாப்பான வகையில் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT