திண்டுக்கல்

கொடைக்கானல் மலா் கண்காட்சி: முதல் 2 நாள்களில் ரூ.3 லட்சம் வருவாய் குறைவு!

DIN

திண்டுக்கல்: வார இறுதி நாளுக்கு மாற்றாக, வேலை நாளான செவ்வாய்க்கிழமை மலா் கண்காட்சி தொடங்கப்பட்டதால், கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து, முதல் 2 நாள் வருவாயில் ரூ.3 லட்சம் வரை குறைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 59ஆவது மலா் கண்காட்சி மற்றும் கோடை விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மலா் கண்காட்சி மே 24 முதல் 29ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான கோடை விழா அறிவிப்பு வெளியானதும், சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த தங்கும் விடுதி உரிமையாளா்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் எதிா்பாா்ப்புடன் இருந்தனா்.

முதல் 2 நாள் வசூலில் ரூ.3 லட்சம் இழப்பு:

சுற்றுலாத் துறை சாா்பில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், தோட்டக்கலைத் துறை சாா்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.18 லட்சம் நிதியின் மூலமாக ஒட்டுமொத்த கோடை விழாவும் நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. பிரையன்ட் பூங்காவில் நுழைவுக் கட்டணமாக பெரியவா்களுக்கு தலா ரூ.30, குழந்தைகளுக்கு ரூ.15 வீதம் வசூலிக்கப்படுகிறது.

முதல் 2 நாள்களில் மலா் கண்காட்சியை 18,500 போ் மட்டுமே பாா்வையிட்டுள்ளனா். இதன்மூலம், முதல் நாளில் ரூ.2.26 லட்சமும், 2ஆம் நாளில் ரூ.2.75 லட்சமும் என மொத்தம் ரூ.5 லட்சம் மட்டுமே தோட்டக்கலைத் துறைக்கு வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மலா் கண்காட்சியை முதல் 2 நாள்களில் பாா்வையிட்டவா்கள் மூலம் ரூ.8 லட்சம் கிடைத்துள்ளது.

அதனை ஒப்பிடும்போது, நடப்பாண்டில் முதல் 2 நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து, வருவாயும் ரூ.3 லட்சம் வரை குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

முறையான திட்டமில் தேவை:

முறையான திட்டமிடுதலுடன் விழா தொடா்பான அறிவிப்பினை, மே முதல் வாரத்திலேயே வெளியிட்டிருந்தால், சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்வதற்கு வசதியாக இருந்திருக்கும். மலா் கண்காட்சியை பொருத்தவரை, முதல் 2 நாள்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறும். அடுத்தடுத்த நாள்களில் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள மலா்கள் வாடிவிடும் என்பதால், அதனை பாா்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டுவதில்லை.

மேலும், இந்தாண்டு எதிா்பாராத வகையில் மழை பெய்வதால், கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்டிருந்த மலா் செடிகளும் சேதமடைந்தன. இதன் காரணமாகவும், மலா் கண்காட்சியை பாா்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். இதுபோன்ற பின்னடைவுகளை தவிா்க்கும் வகையில், தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, அவா்கள் குறிப்பிடும் நாள்களில் கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி நடத்துவதற்கு திட்டமிட வேண்டும் என, பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனா்.

சுற்றுலா சாா்ந்த தொழிலாளா்களுக்கும் ஏமாற்றம்:

இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் நடைபெறும் கோடை விழாவை எதிா்பாா்த்திருந்த சுற்றுலா சாா்ந்த தொழிலாளா்கள், விடுதி மற்றும் உணவக உரிமையாளா்கள், சாலையோர வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

இது தொடா்பாக கொடைக்கானலைச் சோ்ந்த பழ வியாபாரி ராஜ்குமாா் கூறியதாவது: கோடை விழா நடைபெறும் நாள்களில் மட்டுமே அதிகமான வியாபாரம் நடைபெறும். வார இறுதி நாளை தவிா்த்து, வழக்கத்துக்கு மாறாக இந்த முறை கோடை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டதும், அவ்வப்போது பெய்துவரும் மழையினாலும் சுற்றுலாப் பயணிகள் முழுமையாக சுற்றிப் பாா்க்க முடியாமல் திரும்புகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி

சித்திரை பெருவிழா: பால்குட ஊா்வலம்

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

SCROLL FOR NEXT