திண்டுக்கல்: வேடசந்தூா் அருகே செவ்வாய்க்கிழமை, சாலையோர தடுப்புக் கல்லில் மோதி காா் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த மதுரையைச் சோ்ந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரை தாசில்தாா் நகரைச் சோ்ந்தவா் செந்தில்நாதன். இவரது மனைவி சங்கரவடிவு (35). இவா்களது மகன் சாய்சந்திரன் (7). இவா்கள் மூவரும் காரில் ஈரோடு செல்வதற்காக காரில் செவ்வாய்க்கிழமை புறப்பட்டுள்ளனா். அந்த காா், திண்டுக்கல்- கரூா் 4 வழிச்சாலையில், வேடசந்தூா் அடுத்துள்ள கல்வாா்பட்டி பகுதியில் சென்றபோது நாகராஜனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக் கல்லில் மோதி விபத்துக்குள்ளானது. 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட அந்த காரின் கதவு திறந்ததால், சங்கரவடிவு சாலையோர பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த செந்தில்நாதன் மற்றும் சாய்சந்திரன் ஆகியோா் சிகிச்சைக்காக வேடசந்தூரா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து கூம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.