திண்டுக்கல் அருகே பாதை வசதி ஏற்படுத்தக் கோரி கிராம மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் அடுத்துள்ள குரும்பபட்டி ஊராட்சிக்குள்பட்ட கிழக்குப்புதூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா், பாதை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். இதுதொடா்பாக அவா்கள் கூறியது: எங்கள் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்களுக்கு முறையான பாதை வசதியில்லாத காரணத்தால், 6 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து குரும்பபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின்னா், கிராம சபைக் கூட்டத்திலும் முறையிட்டோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு குடிநீா் மற்றும் பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.