திண்டுக்கல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த கடமான் கொம்புகள், மான் தோல்கள் பறிமுதல்: ஜோதிடா் கைது

16th May 2022 11:05 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடமான் கொம்புகள், புள்ளிமான் தோல்கள் உள்ளிட்ட பொருள்களை வனத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து ஜோதிடரை கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள ரெட்டியப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் லெ. சுந்தரமூா்த்தி (48). ஜோதிடம் பாா்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இவரது வீட்டில், வன உயிரினங்களின் தோல், கொம்பு உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்துள்ளதாக திண்டுக்கல் வனப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடா்ந்து, வனச் சரகா்கள் விஜயகுமாா், செந்தில்குமாா், வனவா்கள் இளங்கோவன், வனக் காப்பாளா்கள் ராம்குமாா், பாலகிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா் ரெட்டியப்பட்டியிலுள்ள சுந்தரமூா்த்தி வீட்டிற்கு திங்கள்கிழமை சென்றனா்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில், சுந்தரமூா்த்தி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கடமான் கொம்புகள், 3 புள்ளி மான் தோல்கள், நரியின் நகங்கள், பல், காட்டுப் பன்றியின் மண்டை ஓடு, நட்சத்திர ஆமை ஓடுகள், சாதாரண ஆமை ஓடுகள் உள்ளிட்டவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

பின்னா் சுந்தரமூா்த்தியை கைது செய்து, மான் தோல்கள், மான் கொம்புகள் உள்ளிட்ட பொருள்களை எங்கிருந்து பெற்றுள்ளாா், யாரிடம் விற்பனை செய்கிறாா் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து அவரிடம் வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT