கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள தனியாா் உணவு விடுதியில் திங்கள்கிழமை இரவு சாப்பிட்ட மாணவா்கள் 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அந்த உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கேரளத்திலிருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் சிலா் கொடைக்கானலும் திங்கள்கிழமை சுற்றுலா வந்தனா். இவா்கள் லாஸ்காட்சாலயிலுள்ள தனியாா் உணவகத்தில் திங்கள்கிழமை இரவு சாப்பிட்டுள்ளனா். இதன் பின்னா் சிறிது நேரத்தில் அங்கு உணவு சாப்பிட்ட 10 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவா்களுக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. இதுகுறித்த அறிந்த உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா் லாரன்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனை நடத்தினா். அப்போது அங்கு காலாவதியான உணவுப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் உணவகத்துக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனா்.