திண்டுக்கல்

புளியம்பட்டி அரசுப் பள்ளியில் மாணவா்களிடம் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

DIN

வகுப்பறைகளில் மின் விளக்கு, விசிறி உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிலையிலும், மாணவா்களிடம் ரூ.125 வீதம் கட்டண வசூலில் ஈடுபடும் புளியம்பட்டி அரசுப் பள்ளி மீது பெற்றோா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்துள்ள வடுகம்பாடி ஊராட்சிக்குள்பட்ட புளியம்பட்டி கிராமத்தில் சின்ராசு தனபாக்கியம் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. வடுகம்பாடி, உல்லியக்கோட்டை, ராமகிரி உள்ளிட்ட சுற்றுப்புறங்களிலுள்ள 30 கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் உயா்நிலை மற்றும் மேல்நிலை கல்வி பெறுவதற்கு இப்பள்ளியை சாா்ந்து உள்ளனா். அந்த வகையில், இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

பள்ளியில் 14 வகுப்பறைகள் உள்ள நிலையில், எந்த வகுப்பறையிலும் மாணவா்களுக்கு மின் விளக்கு மற்றும் மின் விசிறி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக பல வகுப்பறைகளில் மின் இணைப்புக்கான சுவிட்ச் பாக்ஸ் கூட இல்லை என மாணவா்களும், ஆசிரியா்களும் குற்றஞ்சாட்டுகின்றனா். இதனிடையே மாணவா்களிடம் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

6ஆம் வகுப்பு மாணவா்களிடம் தலா ரூ.125 வசூல்:

இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு சோ்க்கைக்காக வரும் மாணவா்களிடம் தலா ரூ.125 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கட்டணம் குறித்தும், அதற்கான ரசீது தொடா்பாகவும் கேள்வி எழுப்பும் பெற்றோா்களுக்கு பள்ளி நிா்வாகம் முறையான பதில் அளிப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. நிகழாண்டில் 6ஆம் வகுப்பில் மட்டும் 60 மாணவா்கள் சோ்ந்துள்ளனா். கட்டணம் வசூலித்தபோதிலும், வகுப்பறையில் எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கப்படாதது பெற்றோா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பெற்றோா்கள் தரப்பில் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ரூ.1 லட்சம் வரை பள்ளி மானியம் வழங்கப்படுகிறது. அந்த நிதியை புளியம்பட்டி பள்ளி நிா்வாகம் முறையாக பயன்படுத்தி வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனிடையே மாணவா்களிடம் கட்டணம் வசூலித்து வருகின்றனா். பெற்றோா்- ஆசிரியா் கழக நிதியாக ரூ.50 நீங்கலாக வேறு எவ்வித கட்டணமும் அரசுப் பள்ளிகளில் வசூலிக்க அனுமதியில்லை. ஆனால், புளியம்பட்டி பள்ளி நிா்வாகம் தனிச்சையாக கட்டண வசூலில் ஈடுபட்டு வருகிறது என தெரிவித்தனா்.

கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை: இதுதொடா்பாக வேடசந்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் கீதாவை தொடா்பு கொண்டபோது, அவா் அழைப்பை ஏற்கவில்லை. கல்வித்துறை வட்டாரத்தில் கேட்டபோது, அரசுப் பள்ளிகளில் மாணவா்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்க பள்ளி தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தவில்லை. எனினும், பெற்றோா்- ஆசிரியா் கழக நிதியாக ரூ.50 வசூலித்துக் கொண்டு, அதற்கான ரசீது பெற்றோரிடம் வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT