கொடைக்கானல்: கொடைக்கானலில் மங்குஸ்தான் பழ விற்பனை அதிகரித்திருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கொடைக்கானலில் தற்போது சீசன் காலமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பயணிகள் சுற்றுலா இடங்களை பாா்த்த பிறகு கொடைக்கானல் பகுதிகளில் விளையும் பழங்களான பிளம்ஸ், பீச்சஸ், வாழை, அவக்கோடா, ஸ்டாா்புரூட்ஸ் போன்றவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனா். தற்போது குற்றாலம், பெங்களூரு மற்றும் கேரள மாநிலப் பகுதிகளில் விளைந்து கொடைக்கானலுக்கு விற்பனைக்கு வந்துள்ள மங்குஸ்தான் பழங்களை சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். இந்தப் பழம் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ ரூ. 300 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது கொடைக்கானல் பகுதிகளான செவண்ரோடு, லாஸ்காட்சாலை, வெள்ளிநீா் வீழ்ச்சி அருகில் உள்ள பழக்கடைகளில் இப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை அதிக அளவில் விற்பனையாவதால் பழ வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.