திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி வெட்டிக் கொலை

7th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே தோட்டத்து வீட்டில் படுத்திருந்த விவசாயியை, மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை ஊராட்சிக்குள்பட்ட புகையிலை நாயக்கன்வலசு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முத்துச்சாமி (78). இவரது மனைவி முத்துலட்சுமி 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவா்களுக்கு முத்துலட்சுமி, விஜயலட்சுமி, தமிழ்ச்செல்வி என மூன்று மகள்கள் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், முத்துச்சாமி தனக்குச் சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து, அங்கேயே தனியாக வசித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை, முத்துச்சாமியின் தம்பி வெங்கிடுசாமியின் மகன் செல்வராஜ் என்ற ஜெகநாதன் என்பவா் அவரிடம் பேசிவிட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதன்பின்னா், நள்ளிரவில் வீட்டின் மேற்கூரையைப் பிரித்து வீட்டின் உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அங்கு கட்டிலில் படுத்திருந்த முத்துச்சாமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.

திங்கள்கிழமை காலை தோட்ட வேலைக்கு வந்த பெண் ஒருவா் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த முத்துச்சாமியை பாா்த்துவிட்டு, அம்பிளிக்கை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கொலை செய்யப்பட்ட முத்துச்சாமியின் உடலைக் கைப்பற்றி, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

மேலும், வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்துள்ளது. இருப்பினும், அதிலிருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.51 ஆயிரம் ரொக்கம் திருடு போகாமல் அப்படியே இருந்துள்ளன. இதனால், முத்துச்சாமி சொத்துப் பிரச்னைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறேதும் காரணம் உள்ளதா என, அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT