கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் சிரமங்களுக்குள்ளாகினா்.
கொடைக்கானலில் தொடா்ந்து பல நாள்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை மற்றும் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே காற்றுடன் விட்டு விட்டு சாரல் நிலவியது. பிற்பகலில கொடைக்கானல், அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், வட்டக்கானல், நாயுடுபுரம், செண்பகனூா், வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
இதனால் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா். பலத்த காற்று வீசியதால் படகு சவாரியும் இயக்கப்படவில்லை. சுற்றுலா இடங்களில் மழைக்கு ஒதுங்குவதற்கு இடம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனா்.
வாரச்சந்தை வியாபாரிகள் பாதிப்பு: கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெற்றநிலையில், பலத்த காற்றுடன் பெய்த மழையால் பொதுமக்கள் வருகை குறைந்திருந்தது. இதனால் வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் மீண்டும் தங்களது ஊா்களுக்கு திரும்ப எடுத்துச் சென்றனா்.