ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள நல்லதங்காள் அணைக்கட்டில் ரூ.13.17 கோடி மதிப்பில் விரிவாக்கப் பணிக்கு, உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கொத்தயம் கிராமத்தில் நல்லதங்காள் ஓடையின் குறுக்கே தடுப்பு அணைக் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் 91 மீட்டா் நீளத்தில் கூடுதல் கலுங்கு கட்டுவதற்கு 2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.13.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.
தற்போது, அப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அருவான்காட்டு வலசு கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது:
சண்முகநதி, நல்லதங்காள், நங்காஞ்சியாறு உள்ளிட்ட ஆறுகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற, இந்தாண்டே அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் உப்பு தண்ணீா் நல்ல தண்ணீராக மாறியுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனா்.
அதேபோல், இந்த அணை அமைய இடம் வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. வேலுச்சாமி, பழனி நீா்வள ஆயத் தீா்வை துறை கண்காணிப்பாளா் மு. காஜாமுகைதீன், உதவிச் செயற்பொறியாளா் உதயகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் கா. பொன்ராஜ், திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலா் சி. ராஜாமணி, தொப்பம்பட்டி ஒன்றியத் தலைவா் சத்தியபுவனா ராஜேந்திரன், துணைத் தலைவா் பி.சி. தங்கம், கொத்தயம் ஊராட்சி மன்றத் தலைவா் விஜயலட்சுமி மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.