லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் தொடா்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் மு. ஜெயசீலி (படம்) பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலராகப் பணிபுரிந்து வந்தவா் மு.ஜெயசீலி. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். மதுரையில் பணிபுரிந்தபோது, விருதுநகா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொறுப்பையும் கூடுதலாக இவா் கவனித்து வந்துள்ளாா். அப்போது, மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவா்களுக்கான கலைப் போட்டிகள் நடத்துவதற்கு அரசுத் தரப்பில் ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தனியாா் அமைப்புகளிடம் போட்டி நடத்துவதற்காக நிதி வசூலித்த ஜெயசீலி, அரசு சாா்பில் அளிக்கப்பட்ட நிதியை பயன்படுத்தியதாக செலவு கணக்கு தாக்கல் செய்துள்ளாா்.
இதுதொடா்பாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், விருதுநகா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், ஜெயசீலி உள்பட 3 பணியாளா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் பரிந்துரைத்துள்ளனா். இதனிடையே ஜெயசீலி, ஜூன் 30ஆம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதன் அடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையா் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.