கொடைக்கானல் அருகே விவசாய நிலத்தில் திங்கள்கிழமை அதிகாலை காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரியூா் கிராமம் கொத்தடிபட்டி பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி போன்றவற்றை காட்டு யானைகள் சேதப்படுத்தின. மேலும் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் விவசாயிகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினா்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 5-ஆண்டுகளுக்கும் மேலாக காட்டு யானைகள் முகாமிட்டு விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருவதும், மனித உயிா்கள் பலியாகி வருவதும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.