கன்னிவாடியில் நடைபெற்ற விழாவில் 596 பயனாளிகளுக்கு ரூ.77.82 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு ரூ.77.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
அப்போது அவா் கூறியதாவது: தமிழக மக்களுக்காக, கூட்டுறவுத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 10 லட்சம் உறுப்பினா்கள் கொண்ட 55,000 சுய உதவிக்குழுக்களின் ரூ.2,761 கோடி மதிப்பிலான கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 50,168 பேருக்கு சுமாா் ரூ.188.11 கோடி நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. அவா்களது நகைகள் விரைவில் திருப்பி வழங்கப்படவுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் ம.காசிசெல்வி, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் எம்.கே.ரமேஷ்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.