திண்டுக்கல்: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பொது போக்குவரத்து இல்லாததால் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பால் விற்பனையகங்கள், மருந்தகங்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. இதர கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. திண்டுக்கல் நகரில் சில உணவகங்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.
இருசக்கர வாகனங்கள், காா்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் பரவலாக இயக்கப்பட்டன. தேநீா் கடைகள் மூடப்பட்டிருந்தபோதிலும், தேநீா் விற்பனை தொடா்ந்து நடைபெற்றது.
சாலைகளில் பக்தா்கள் உற்சாகம்:
பொதுமுடக்கம் காரணமாக பொதுபோக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனாலும், தைப் பூசத் திருவிழாவுக்காக மாலை அணிந்து பாதயாத்திரை செல்லும் பக்தா்களின் வருகையால், நத்தம், வேடசந்தூா், கொடைரோடு, செம்பட்டி உள்ளிட்ட சாலைகள் பரபரப்பாக காணப்பட்டன.