கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததால், வனப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
‘மாண்டஸ்’ புயல் காரணமாக கடந்த 2 நாள்களாக கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால், கொடைக்கானலில் வியாழக்கிழமை இரவு முதல் மின் விநியோகம் தடைபட்டது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கொடைக்கானல்- வத்தலகுண்டு சாலை, ஏரிச் சாலை, அடுக்கம் கும்பக்கரை செல்லும் தாமரைக்குளம், கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் மரங்கள் விழுந்தன. சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத் துறையினா், வனத் துறையினா், மின்சாரத் துறையினா், நகராட்சித் துறையினா் சாலையில் விழுந்த மரங்களையும், சேதமடைந்த மின் கம்பிகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வனப் பகுதிகளில் சுற்றுலா செல்ல அனுமதி மறுப்பு:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடா்ந்து காற்றுடன் மழை பெய்து வருவதால், வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களான குணா குகை, பில்லா் ராக், மோயா் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, அமைதிப் பள்ளத்தாக்கு, பேரிஜம் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் அனுமதி மறுத்தனா்.
மேலும், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.