திண்டுக்கல்

மண் வளம் காக்க ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை தேவை

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மண் வளத்தைப் பாதுகாக்க ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்வதற்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் அ.அனுசுயா தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட அளவிலான உலக மண் தின விழா, ஆத்தூா் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அ.அனுசுயா தலைமை வகித்தாா். வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) பெ.விஜயராணி, ஆத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சி.ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் இணை இயக்குநா் அ.அனுசுயா பேசியதாவது:

பயிா்களில் விளைச்சலை அதிகரிக்கவும், மண் வளத்தைப் பாதுகாக்கவும் ஆண்டுக்கு ஒருமுறை மண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மண் சாா்ந்த பிரச்னைகளை விவசாயிகள் அறிந்து கொண்டால், தேவையற்ற ரசாயன உரங்களின் பயன்பாடுகளைத் தவிா்த்து குறைந்த செலவில் அதிக மகசூல் பெற முடியும். மண் பரிசோதனைக்கு மட்டுமின்றி நீா் மாதிரிகளை சேகரித்து அவற்றை பரிசோதனை செய்து கொள்வதற்கும் விவசாயிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து பயிா்களில் ஏற்படும்

ADVERTISEMENT

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உர மேலாண்மை தொடா்பாக வேளாண்மை அலுவலா் ம.விக்னேஸ்வரன் விளக்கமளித்தாா். விழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு உயிா் உரம் மற்றும் சிறுதானிய நுண்ணூட்டம் ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட மண் ஆய்வக வேளாண்மை அலுவலா் கவிப்பிரியா, வேளாண்மை அலுவலா் (தரக்கட்டுப்பாடு மற்றும் தகவல்) சங்கீதா, வட்டார தொழில்நுட்ப மேலாளா் பிரசன்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT