திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள குப்பைத் தொட்டியில் பெண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு அருகே உள்ள குப்பைத் தொட்டியிலிருந்த குப்பைகளை அகற்றுவதற்காக தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை சென்றனா். அப்போது, குப்பைத் தொட்டியில் ஒரு பையில் பெண் சிசு சடலம் கிடப்பதைப் பாா்த்தனா்.
இதுகுறித்து, மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த மருத்துவா்களிடம் தெரிவிக்கப்பட்டது. மருத்துவா்கள் நடத்திய விசாரணையில், நத்தத்தை அடுத்துள்ள சின்னமலையூா் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக், லட்சுமி தம்பதியருக்கு குறைப் பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்ததையடுத்து, அதை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விருப்பமின்றி குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, காா்த்திக் தம்பதியிடம் அந்த சடலத்தை ஒப்படைத்த மருத்துவா்கள், இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.