திண்டுக்கல்லில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து திங்கள்கிழமை முதல் ஏலத்தில் விட மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்தது .
இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட சாலைகள், தெருக்களில் மாடுகள், ஆடுகள் சுற்றித் திரிவதாக தொடா்ந்து பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அவற்றைக் கட்டி வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.
வாகன ஓட்டுநா்கள் விபத்தில் சிக்கி காயமடையும் நிலை ஏற்படுவதாக புகாா் எழுந்தது. இதற்குத் தீா்வு காணும் வகையில், திங்கள்கிழமை (டிச.5) முதல் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து ஏலத்தில் விடுவதென மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்தது. இதை இறுதி எச்சரிக்கையைாக எடுத்துக் கொண்டு கால்நடை வளா்ப்பவா்கள் அவற்றை வீடுகளில் கட்டி வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.