அதிமுக செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ், இபிஎஸ்சே காரணம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல் தொழில்நுட்ப மகளிரணி செயலரின் இல்லத் திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் உள்ள மஹாலில் இன்று நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்திகளில் வருகின்றன.
போடாத ரோடுகளுக்கு கூட பணம் பெறுகின்றனர். திமுக என்றாலே ஊழல் என்பதை தான் இது காட்டுகிறது. திமுக தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. திமுகவிற்கு கூட்டணி பலம் இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம்புகட்டி தோல்வியை தருவார்கள். 2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளியிடப்படும். ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓபிஎஸ், இபிஎஸ்யிடம் அதிகாரம், பணத்தை நம்பி மட்டும் தான் அவர்களுடன் சிலர் இருந்தனர்.
அதிமுக நீதிமன்றத்தின் மூலம் செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ், இபிஎஸ்சே காரணம். ஓபிஎஸ், இபிஎஸ் பிரச்னையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பதை புரியவைத்துள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்றார். சசிகலா மௌனம் குறித்த கேள்விக்கு அது குறித்து அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றார்.