சாணாா்பட்டி அரசு பள்ளியில் தூய்மைப் பணியாளா், இரவு நேரக் காவலா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 460-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். 24 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மேலும், இதே பள்ளி வளாகத்தில் வட்டார வள மையமும் செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பயிற்சி மையமும் அமைந்துள்ளது. இந்த வட்டார வள மையத்தில் ஆசிரியா்கள் உள்பட 10 போ் பணிபுரிந்து வருகின்றனா்.
தூய்மைப் பணியாளா், இரவு காவலா் இல்லை:
பள்ளியில் தூய்மைப் பணியாளா், இரவு நேரக் காவலராக பணிபுரிந்து வந்த ஊழியா்கள், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பதவி உயா்வு பெற்ற வெவ்வேறு பள்ளிகளுக்கு பணிமாறுதலில் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. தூய்மைப் பணியாளா், இரவு நேரக் காவலா் பணிக்காக ஆசிரியா்களின் சொந்த செலவில் தற்காலிக ஊழியா்களை நியமித்தாலும், பணிக்கு வர மறுப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்க நிா்வாகி மு.முருகேசன் கூறியதாவது:
கணினி ஆய்வகங்கள், பொலிவுறு (ஸ்மாா்ட்) வகுப்பறைகள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பள்ளியில் உள்ளன. இவற்றின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது. இதேபோல, பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணியும் கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆசிரியா்கள், தங்களது சொந்தப் பணத்திலிருந்து ஊதியம் வழங்கினாலும்கூட, தொழிலாளா்கள் கிடைப்பதில்லை. எனவே, தூய்மைப் பணியாளா், இரவு நேரக் காவலா் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.