உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்தாா். உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியா் விசாகன் முதல் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஆா். பூமிநாதன், காசநோய் பிரிவு துணை இயக்குநா் எம்.இ. ராமசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியின்போது வண்ண பலூன்களை பறக்க விட்டும், ஆட்டோக்களில் எய்ட்ஸ் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியும் விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து செவிலியா் பயிற்சி கல்லுாரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.