குஜிலியம்பாறை அருகே கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள தீண்டாக்கல் வீரபாண்டீஸ்வா் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 190 ஏக்கா் நிலம் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.
இதுதொடா்பாக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், ஆக்கிராமிப்பாளா்களை வெளியேற்றி நிலங்களை கையகப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பாரதி தலைமையிலான அலுவலா்கள் ஆக்கிராமிப்பாளா்களை வெளியேற்றும் பணியில் கடந்த திங்கள்கிழமை ஈடுபட்டனா். தீண்டாக்கல் வீரபாண்டீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 180.98 ஏக்கா் நிலம் 21 ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.100 கோடி என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.