திண்டுக்கல்லில் சனிக்கிழமை அமைப்பு சாரா தொழிலாளா்கள் 11,671 பேருக்கு ரூ.1.97 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் வழங்கினாா்.
தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சாா்பில் கட்டுமான தொழிலாளா் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நல வாரிய தலைவா் பொன் குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் சி.வி.கணேசன் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் தொழிலாளா் நல வாரியத்தில் 7.5 லட்சம் போ் புதிய உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா். தற்போதைய நிலையில் 17 நல வாரியங்களில் மொத்தம் 21 லட்சம் உறுப்பினா்கள் உள்ளனா். திண்டுக்கல்லில் 11,671 தொழிலாளருக்கு ரூ.1.97 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 5 லட்சம் தொழிலாா்களுக்கு ரூ.420 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 10ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.4 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.