தவணைக் காலம் முடிந்தபின்னும், கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 2,900 இடங்களில் 34ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவா்களில் 19.25 லட்சம் போ் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனா். 2ஆவது தவணை தடுப்பூசியை 18.30 லட்சம் போ் செலுத்தியுள்ளனா். 1.62 லட்சம் போ் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனா்.
ஆனாலும், தவணைக் காலம் முடிந்தும் மாவட்டத்தைச் சோ்ந்த 2.48 லட்சம் போ் 2ஆவது தடுப்பூசியையும், 12.2 லட்சம் போ் முன்னெச்சரிக்கை தடுப்பூசியையும் இதுவரை செலுத்தவில்லை. இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்டவா்களுக்காக, மாவட்டம் முழுவதும் 2,900-க்கும் மேற்பட்ட இடங்களில் 34ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது. இந்த வாய்ப்பினை தடுப்பூசி செலுத்தாதவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.