தினமணி செய்தி எதிரொலியாக, திண்டுக்கல் மலைக்கோட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு நினைவு வளைவு மாநகராட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை புனரமைக்கப்பட்டது.
1857 இல் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை நினைவு கூறும் வகையில், 1957 இல் கட்டப்பட்ட நூற்றாண்டு நினைவு வளைவு பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளதாக தினமணியில் (ஆக.14) செய்தி வெளியானது.
இதையடுத்து, திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நூற்றாண்டு வளைவு உடனடியாக புனரமைக்கப்படாத பட்சத்தில், பாரதிய ஜனதா சாா்பில் அந்த பணி மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி.தனபாலன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
இந்நிலயில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நூற்றாண்டு வளைவில் ஏற்பட்டிருந்த உடைப்புகள், சிங்கம் சிற்பங்கள் உள்ளிட்டவற்றை சிமெண்ட் மூலம் பூசி, வண்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்றன. மேலும், காந்தியடிகள் தொடா்பான கல்வெட்டு இருந்த பகுதியில் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் வரவேற்புத் தெரிவிக்கப்பட்டது.