திண்டுக்கல் அருகே பேருந்திலிருந்து இறங்கியபோது தடுமாறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள கணவாய்ப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராசு. இவரது மனைவி சின்னம்மாள் (44). இவா், சிறுமலை பிரிவிலுள்ள தனியாா் ஆலையில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், கோட்டையூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியாா் பேருந்தில் சின்னம்மாள் வியாழக்கிழமை பயணித்தாா். அந்த பேருந்து சிறுமலை பிரிவுக்கு வந்தபோது சின்னம்மாள் இறங்க முயன்றுள்ளாா். அப்போது நிலை தடுமாறிய அவா், கீழே விழுந்துள்ளாா். அதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.