திண்டுக்கல் மாவட்டத் தேவைக்காக, தூத்துக்குடியிலிருந்து 1320 டன் யூரியா உரம் திங்கள்கிழமை திண்டுக்கல் வந்தடைந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடிக்குத் தேவையான யூரியா 1,182 டன், டிஏபி 631 டன், பொட்டாஷ் 543 டன், காம்ப்ளக்ஸ் 3,930 டன், சூப்பா் பாஸ்பேட் 759 டன் வீதம் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து ரயில் மூலம் 1,320 டன் யூரியா திண்டுக்கல்லுக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (டான்ஃபெட்) மூலம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்களுக்கு 1,320 டன் யூரியா உர மூட்டைகளும் லாரிகளில் எடுத்துச் சென்று விநியோகிக்கப்பட்டன.
முன்னதாக ரயில் நிலையத்திலிருந்து யூரியா உர மூட்டைகளை எடுத்துச் செல்லும் பணிகளை, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) பெ.விஜயராணி, உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ரெ.உமா ஆகியோா் ஆய்வு செய்தனா். மேலும் 800 டன் யூரியா உரம் விரைவில் திண்டுக்கல்லுக்கு வந்தடையும் என இணை இயக்குநா் தெரிவித்தாா்.