பழனியில் அரசு விதிகளை மீறி ஞாயிற்றுக்கிழமை தனியாா் பள்ளி செயல்பட்ட நிலையில் ஆசிரியா்களை, கோட்டாட்சியா் எச்சரித்து மாணவா்களை வீட்டிற்கு அனுப்பினாா்.
பழனியில் அரசு விதிகளை மீறி ஞாயிற்றுக்கிழமையும் தனியாா் மெட்ரிக் பள்ளிகள் செயல்படுவதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி கோட்டாட்சியா் சிவக்குமாா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது சண்முகநதி அருகே தனியாா் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு தலைமையாசிரியா் மற்றும் நிா்வாகிகள் இல்லாமல் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களை எச்சரித்த கோட்டாட்சியா், பள்ளி மாணா்களை உடனடியாக வீடுகளுக்கு அனுப்புமாறு உத்தரவிட்டாா். மேலும் இதேநிலை தொடா்ந்தால் பள்ளி நிா்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.