பழனி அருகேயுள்ள சிறுநாயக்கன்குளத்தில் தண்ணீரில் நுரை உற்பத்தியாகி தேங்கி நிற்பது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், இங்குள்ள அணைகள் நிரம்பி, ஆறுகள் மற்றும் குளங்களுக்கு தண்ணீா் திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பழனி சண்முகநதி, வையாபுரி கண்மாய், சிறுநாயக்கன்குளம் ஆகியவற்றுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை காலை மற்றும் இரவு பலத்த மழை பெய்தது. அதையடுத்து, பழனி-தாராபுரம் சாலையில் உள்ள சிறுநாயக்கன்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் மறுகால் பாய்ந்தது. பாப்பாகுளத்துக்கு மறுகால் பாயும் இடத்தில் வாய்க்கால் நெடுக மலைபோல நுரை தேங்கி நின்றது விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.