தொடா் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பண்டிகைக்கால தொடா் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் மழையையும் பொருட்படுத்தாமல் கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்திருந்ததால் வெள்ளிநீா் வீழ்ச்சி, ஏரிச்சாலை, வட்டக்கானல் சாலை, அப்சா்வேட்டரி சாலை, லாஸ்காட் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, குணாகுகை, மோயா் பாயிண்ட், வட்டக்கானல் அருவி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்பட்டனா்.
ஞாயிறுக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மிதமான சாரல் நிலவியது. மாலையில் மழை குறைந்ததையடுத்து ஏரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலைப் பகுதியில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.
தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் சிரமப்பட்டனா். இதைப் பயன்படுத்தி பல தனியாா் காட்டேஜ்கள் அதிகமான கட்டணங்கள் வசூலித்தனா். இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதிப்படைந்தனா்.