பச்சைமலையான்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் 20 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2019-20-ஆம் ஆண்டிற்கான, ஆய்வுகள் கடந்த 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதற்கான ஒப்புதல் பெறுவதற்கு, சமூகத் தணிக்கை சிறப்பு கிராமசபைக் கூட்டம் செம்பட்டி அருகேயுள்ள மேட்டுப்பட்டி பேத்தரசு அம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பச்சமலையான் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் காளிதாஸ் தலைமை வகித்தாா்.
ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் காளீஸ்வரி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், சிறப்பு பாா்வையாளராக நிலக்கோட்டை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் புவனேஸ்வரி கலந்து கொண்டாா். மேலும், ஊராட்சி மன்றச் செயலா் ஜெயகணேஷ், மற்றும் வாா்டு உறுப்பினா்கள், மக்கள் நலப்பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.