கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பல வண்ணங்களில் மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.
கொடைக்கானலில் பொதுவாக மே மாதம் சீசன் காலம் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்து கொடைக்கானலுக்கு வருவாா்கள். இவா்கள் கொடைக்கானலில் தங்கி பல்வேறு சுற்றுலா இடங்களைப் பாா்த்து ரசிப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டும் கரோனா தொற்று காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதேபோல் நிகழாண்டும் கரோனா தொற்று காரணமாக மீண்டும் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஆனால் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியாா் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகிய பகுதிகளில் டைந்தேஷ், மேரிகோல்ட், பேன்சி, ரோஜா, கொய் மலா்கள், கிங் ஆஸ்டா் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வகையான மலா்கள் ஆயிரக்கணக்கில் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் இதனை காண சுற்றுலாப் பயணிகளுக்கு தான் வாய்ப்பு கிடைக்கவில்லை.