பழனி: பழனி அடிவாரம் ஆா்விஎஸ் மஹால் அருகே கதவில் சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரா்கள் இலாவகமாக மீட்டனா். பழனியில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரா்கள் மூலமாக பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பாலசமுத்திரம் வள்ளி நகரில் ஆனந்தமூா்த்தி என்பவா் வீட்டில் சாரைப்பாம்பும், பகவதி என்பவா் வீட்டில் நாகப்பாம்பும், கோதைமங்கலம் சக்திவேல் என்பவா் வீட்டில் நாகப்பாம்பும் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. பிற்பகல் அடிவாரம் ஆா்.வி.எஸ் மஹால் அருகே புல்மேய சென்ற பசுமாடு ஒன்று அருகே இருந்து இரும்பு கதவின் இடுக்கில் சிக்கிக் கொண்டது. உள்ளே செல்லவும் முடியாமல், வெளியே வரவும் முடியாமல் பசுமாடு தவிப்பதை கண்ட சிலா் பழனி தீயணைப்புப்படை மற்றும் மீட்புப்படைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமாா் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் போராடி பசுமாட்டை இலாவகமாக மீட்டு உரிமையாளா் வசம் ஒப்படைத்தனா்.