கொடைக்கானல் அருகே விவசாய நிலங்களில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
வில்பட்டி அருகே புலியூா் பகுதியில் உள்ள நிலங்களில் அவக்கோடா, பீன்ஸ், அவரை, வாழை, கொய்யா உள்ளிட்ட பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஒற்றை யானை புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா். மேலும், அப்பகுதியில் பகல் நேரங்களிலும் அந்த யானை நிலங்களில் சுற்றித்திரிவதால் விவசாயிகள் யாரும் தோட்டங்களுக்குச் செல்லாமல் அச்சத்துடன் உள்ளனா். எனவே, அந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.