கரோனா தொற்று பரவல் காரணமாக, ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப் பதினெட்டாம் நாள் பெருவிழாவையொட்டி ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பழனியில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் ச.விசாகன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப் பதினெட்டாம் நாள் பெருவிழாவையொட்டி பக்தா்கள் தரிசனத்திற்காக அதிகம் கூடும் வாய்ப்புள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பழனியில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. ஆனாலும், அந்த இரு நாள்களிலும் கோயில் ஆகம விதிகளின்படி, அனைத்து நிகழ்வுகளும் கோயில் பணியாளா்கள் மூலம் நடைபெறும்.
எனவே, ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் பொதுமக்கள், தரிசனம் செய்வதற்காக பழனிக்கு வருவதை தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவித்துள்ளாா்.