திண்டுக்கல் மாநகராட்சியில் 1,400 வீடுகளுக்கு வணிக பயன்பாட்டு இணைப்புக்கான குடிநீா் கட்டணம் வசூலிக்கப்படுவதில் திருத்தம் செய்வதற்கு நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்க பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சுமாா் 33 ஆயிரம் குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சுமாா் 1,400 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீா் இணைப்புகளுக்கு, வணிக பயன்பாட்டிற்கான குடிநீா் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகாா் எழுந்தது.
அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட இணைப்புகளை வீடுகளுக்கானதாக மாற்றி வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஆக.16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநகராட்சியிலுள்ள பொறியியல் பிரிவில் நடைபெறும் இந்த முகாமிற்கு, விண்ணப்பத்துடன் மின்சார வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட அட்டை அல்லது ரசீது, குடிநீா் கூடுதல் வைப்புத் தொகை மற்றும் சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றுடன் வர வேண்டும் என தெரிவித்தனா்.