நத்தம் அருகே புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில், தந்தையும், மகனும் உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்துள்ள சேக்கிப்பட்டியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (50). இவா், சேக்கிப்பட்டி கிளை அஞ்சலகத்தில் தபால் அலுவலராக பணிபுரிந்து வந்தாா். இவரது மகன் ஜெய்ஸ்ரீராம் (14). இவா் தனியாா் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் நத்தத்திற்கு இருசக்கர வாகனத்தில் பாலசுப்பிரமணியம் தனது மகனுடன் புதன்கிழமை இரவு சென்றாா். பின்னா் அங்கிருந்து இருவரும் மீண்டும் சேக்கிப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா்.
எரக்காய்பட்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் மோதி விபத்து ஏற்பட்டது. அதில், பலத்த காயமடைந்த தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.