பழனியை அடுத்த கீரனூரில் மின்மயானம் அமைப்பதற்கு ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து, சமரசப் பேச்சுவாா்த்தை கூட்டத்திலிருந்து சனிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நவீன எரிவாயு மயானம் உள்ளதால், இங்கு ஆயக்குடி, பாலசமுத்திரம், கீரனூா், நெய்க்காரபட்டி பேரூராட்சி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளிலிருந்து சடலங்கள் கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பழனியை அடுத்த கீரனூரில் உள்ள இடுகாட்டில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நவீன எரிவாயு மயானம் கட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, நிா்வாகஅனுமதி பெறப்பட்டு, தற்போது ஒப்புந்தப்புள்ளி விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதற்கு ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து, கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.
இதையடுத்து, சனிக்கிழமை பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இரு தரப்பினருக்குமிடையே சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ஒரு தரப்பினா் தங்கள் சமூகத்தில் பெரும்பாலானோா் சடலங்களை புதைக்க மட்டுமே செய்வதால், தங்களுக்கு போதிய இடம் இருப்பதாகவும், எரிவாயு மயானம் தேவையில்லை என்றும் தெரிவித்தனா்.
மேலும், அருகாமையில் கோயில்கள் இருப்பதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தனா்.
அதேநேரம், அரசு சாா்பில் எரிவாயு மயானம் அமைக்க பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எதிா்ப்புக் குழுவினா் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததுடன், இப்பணி தொடா்ந்தால் தாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறிச் சென்றனா்.