திண்டுக்கல்: இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் பெருமாள்சாமி தெரிவித்துள்ளதாவது: தோட்டக்கலைத் துறை மூலம் இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பருவம் தவறிய காலத்தில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்வதற்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 மற்றும் காய்கனி பயிா்களான வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை மற்றும் கொடி வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 3,750 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதுதவிர அங்கக சான்று பெறுவதற்கும் ரூ.500 மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 2 ஹெக்டோ் வரை ஒரு விவசாயிக்கு மானியம் வழங்கப்படும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் ஊக்கத் தொகை பெற சம்மந்தப்பட்ட இயற்கை பண்ணையின் சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் காய்கனி சாகுபடி செய்த பரப்பு விவரங்கள் மற்றும் வருவாய் ஆவணங்களான சிட்டா, அடங்கல் மற்றும் வயல் புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அந்ததந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் உழவன் செயலி மற்றும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.