கொடைக்கானலில் சுமார் 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் அகற்றப்பட்டு வருகிறது.
கொடைக்கானலில் ஆனந்தகிரி 5வது மற்றும் 7 வது பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலத்தை கொடைக்கானலைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டபர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தரக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதில் நீதிமன்றமானது நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று கொடைக்கானல் காவல் துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை நகராட்சி நிர்வாகம் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றும் போது அப்பகுதியில் இருந்தவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் காவல் துறையினர் முன்பு பூச்சி மருந்து குடிக்க முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்ததோடு அவர்களிடம் சமரச, பேச்சு வார்த்தை நடத்தினர்.
நகராட்சி ஆணையாளர் நாராயணன் மற்றும் சர்வேயர் துறையினர் 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்தனர். கொடைக்கானல் டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.